மும்பை, அக். 28–
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு ரூ.20 கோடி கேட்டு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது.
முகேஷ் அம்பானிக்கு நேற்று ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் ‘நீங்கள் 20 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் உங்களைக் கொன்று விடுவோம். இந்தியாவில் திறமையான துப்பாக்கிச் சுடுபவர்கள் இருக்கிறார்கள்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தது.
போலீசார் வழக்குப்பதிவு
இதுகுறித்து முகேஷ் அம்பானி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மிரட்டல் விடுத்த நபர் ஷதாப் கான் என்பது விசாரணையில், தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மும்பையின் காம்தேவி காவல்நிலையத்தில் பிரிவு 387, 506 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் இதேபோல் முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. ரிலையன்ஸ் பவுன்டேசன் மருத்துவமனைக்கு போன் செய்த மர்ம நபர், மருத்துவமனையை வெடி வைத்து தகர்க்கப் போவதாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனையொட்டி, 2022 ஆகஸ்ட் மாதம் ஒரு நகைவணிகர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
அதேபோல், 2021 பிப்ரவரி மாதம், தெற்கு மும்பையிலுள்ள முகேஷ் அம்பானியின் ‘ஆண்டலியா’ இல்லத்தின் அருகே, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்ததை போலீசார் பறிமுதல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.