செய்திகள்

ராகுல் சொத்து மதிப்பு ரூ.20 கோடி:சொந்த கார், வீடு இல்லை, ரூ.55 ஆயிரம் மட்டுமே கையிருப்பு

கேரளா, ஏப்.4–

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு ரூ.20 கோடி ஆகும். சொந்த கார் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு இல்லை என பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் வாகன பேரணி மேற்கொண்டு பின்னர் மனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனுவுடன் அளித்த பிரமாண பத்திரத்தின்படி, அவருடைய சொத்து மதிப்பு விவரங்கள் வருமாறு:–

பங்கு சந்தை வர்த்தகத்தில் ரூ.4.3 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளார். மியூச்சுவல் பண்டில் ரூ.3.81 கோடிக்கு வைப்புநிதியாக வைத்துள்ளார். வங்கியில் கணக்கில் ரூ.26.25 லட்சம் உள்ளது. ரூ.55 ஆயிரம் கையிருப்பில் உள்ளது.

கார், வீடு இல்லை

அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது. சொந்த வாகனம் கிடையாது.

2022–23 நிதியாண்டில் மொத்தம் ரூ.1.02 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அவரிடம், மொத்தம் ரூ.9.24 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. இதில் ரூ.15.2 லட்சம் மதிப்பிலான தங்க பத்திரங்கள் அடங்கும். தேசிய சேமிப்பு திட்டங்கள், அஞ்சலக சேமிப்புகள், காப்பீட்டு திட்டங்கள் மற்றும் பிற சேமிப்புகளில் மொத்தம் ரூ.61.52 லட்சம் அவருக்கு உள்ளன.

ரூ.20 கோடி சொத்து

ஆண்டுக்கு ரூ.1 கோடி வருவாயுடன் மொத்தம் ரூ.20 கோடி சொத்து உள்ளது. இவற்றில், டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் உள்ள விவசாய நிலம், குருகிராமில் அலுவலகம் என ரூ.11 கோடி மதிப்பிலான அசையா சொத்தும் உள்ளது. விவசாய நிலத்திற்கு பிரியங்கா காந்தி இணை உரிமையாளராகவும் உள்ளார்.

ராகுல் காந்திக்கு எதிராக 18 எப்.ஐ.ஆர்.கள் விசாரணைக்காக உள்ளன. 2019ம் ஆண்டில் அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.15.89 கோடியாக இருந்தது. ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆனி ராஜாவுக்கு மொத்தம் ரூ.72 லட்சம் மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வயநாடு தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ந்தேி நடக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *