கோவை, பிப். 26–
ரஞ்சிக் கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்த தொடரில் கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் செளராஷ்டிரா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய செளராஷ்டிரா அணி, தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோரின் அபார பந்துவீச்சில் சிக்கி 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று 3வது நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதன் மூலம் அந்த அணி 155 ரன்கள் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய செளராஷ்டிரா அணி 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக பவுலிங் செய்த சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் தமிழ்நாடு அணி 33 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்ததோடு 7 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சிக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது.