செய்திகள்

மோடி நாளை வருகை: திருப்பூர், மதுரையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

திருப்பூர், பி்ப். 26–

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருவதையொட்டி, திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு ‘என் மண், என் மக்கள்’ என்ற யாத்திரையை தொடங்கினார். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்ட அவர் நாளை (27-ந்தேதி) திருப்பூரில் யாத்திரையை நிறைவு செய்கிறார். இதனை தொடர்ந்து பல்லடம் அருகே உள்ள மாதாப்பூரில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.இதற்காக நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சூலூர் விமானப் படை தளத்திற்கு மதியம் 2.30 மணிக்கு பிரதமர் மோடி வருகிறார். பின்னர் அங்கிருந்து பொதுக்கூட்டம் நடக்கும் மாதாப்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் செல்கிறார். பிரதமரின் வருகைக்காக பிரத்யேக ‘ஹெலிபேடு’ மற்றும் நடைபாதை அமைக்கும் பணி நிறைவடைந்து ஒத்திகை பார்க்கப்பட்டது.

ஹெலிபேடில் இருந்து மேடை வரை ஒரு கி.மீ. தூரம் மெட்டல் ரோடு அமைக்கப்பட்டு, அதன் மேல் ‘மேட்’ விரித்துள்ளனர். திறந்தவெளி வாகனம் மூலம் தொண்டர்களை பார்த்த படி, பிரதமர் வரும் வகையில் பிரத்யேக நடைபாதையாக இது அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்திருப்பார்கள்.

கூட்டம் நடக்கவுள்ள மைதானத்தை சுற்றி 5 கி.மீ. தூரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, 4,550 போலீசார் திருப்பூர் எஸ்.பி. அபிஷேக் குப்தா தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். உளவுத்துறை போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுக்கூட்ட மைதானத்தைச் சுற்றி 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுக்கூட்ட நாளன்று தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும், தீவிர சோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்பட உள்ளனர்.

மத்திய அமைச்சர் முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உட்பட மாநில நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

கூட்டத்தில் பங்கேற்று ஒரு மணி நேரம் சிறப்புரை ஆற்றும் பிரதமர் மோடி 3:45 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் கருப்பாயூரணி அருகே உள்ள வீரபாஞ்சான் டி.வி.எஸ். பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்குகிறார்.

அதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெறும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்தபின் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி மதுரை பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு தமிழக பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

பின்னர் அங்கு இரவு தங்கி விட்டு மறுநாள் (28-ந்தேதி) காலை 8.40 மணிக்கு தனியார் ஓட்டலில் இருந்து சாலை மார்க்கமாக காரில் விமான நிலையம் செல்லும் அவர், அங்கிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு செல்கிறார்.

மதுரை விமான நிலையம், மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ள தனியார் பள்ளி இடம், தங்கும் ஓட்டல் ஆகியவை மத்திய போலீஸ் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. அங்கு மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் நாளை இரவு மோடி தங்க உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் ஆலோசனையின் பேரில் டி.ஐ.ஜி. ரம்யா பாரதி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, நகர் போலீஸ் கமிஷனர் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் மதுரை நகரம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகையொட்டி 2 நாட்கள் திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *