சென்னை, டிச. 9– முதலமைச்சரின் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 1ந் தேதி முதல் 7ந் தேதி வரை 1,060 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 78,663 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று 623 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மழைநீர் வடிந்த இடங்களில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் 526 நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும், 97 நிலையான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த மருத்துவ முகாம்களில் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், சேற்றுப்புண் உள்ளிட்ட மழைக்கால நோய்கள் மற்றும் இதர மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
மாநகராட்சி செய்திக் குறிப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.