சென்னை, நவ. 4–
சென்னையில் அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர்களை தாக்கிய விவகாரம் தொடர்பாக, பாஜக பெண் நிர்வாகியான நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் மேற்கொண்டதை பார்த்த அரசு பேருந்தை வழிமறித்ததோடு பேருந்து ஓட்டுனரையும், நடத்துனரையும் மிகவும் கேவலமான வார்த்தைகளால் அவதூறாக பேசி பாஜக பிரமுகரும் துணை நடிகையுமான ராஞ்சனா நாச்சியார் அர்ச்சனை செய்தார். மேலும் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து பேருந்தில் இருந்து இறக்கிவிட்டார்.
பாஜக துணை நடிகை கைது
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மாணவர்களை தாக்கிய ரஞ்சனா நாச்சியாரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து மாங்காடு போலீசார் அரசு பேருந்தை வழிமறித்தது, கண்டக்டர், டிரைவரை அவதூறாக அசிங்கமாக பேசியது, மாணவர்களை தாக்கியது உள்ளிட்ட புகாரின் பேரில் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த துணை நடிகை ரஞ்சனா நாச்சியாரை இன்று காலை போலீசார் கைது செய்ய முப்பட்டபோது போலீசார் உடன் வரமாட்டேன் என அடம்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனை பொருட்படுத்தாத பெண் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக மாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.