உச்ச நீதின்றம் இன்று அதிரடி உத்தரவு
டெல்லி, ஜன. 16–
உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள ஷாயி ஈத்கா மசூதியில் ஆய்வு செய்வதற்காக ஆணையரை நியமிக்கும் அலகாபாத் உயர் நீதிமன்ற அனுமதிக்கு, உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலக் தடைவிதித்துள்ளது.
கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் மதுரா, உத்தரபிரதேசத்தின் புனித நகரமாக கருதப்படுகிறது. இங்குள்ள பழமையான கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலின் ஒரு பகுதி 1669-70-ல், முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்டதாகவும், பிறகு அந்த பாதி நிலத்தில் அவுரங்கசீப், ஷாயி ஈத்கா மசூதியை கட்டியுள்ளார் என்றும் இந்துத்துவ வாதிகளால் கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றம் தடை
அயோத்தி ராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு கிருஷ்ண ஜென்ம பூமி குறித்த கோரிக்கை மீண்டும் எழுந்தது. மதுரா நீதிமன்றங்களில் பல்வேறு மனுக்கள் தொடுக்கப்பட்டன. உத்தர பிரதேசத்தின் மதுரா மசூதியில் களஆய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் அனுமதி அளித்தது. இந்திய தொல்லியல் ஆய்வகம் மசூதியில் களஆய்வு நடத்தி புகைப்படங்கள் மற்றும் காட்சிப்பதிவுகளுடன் தனது அறிக்கையை அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு,” நீதிமன்றம் ஒரு ஆணையரை நியமிக்க, ஒரு தெளிவற்ற மனுவினை நீங்கள் தாக்கல் செய்ய முடியாது. அது ஒரு குறிப்பிட்ட நோக்கமுடையதாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விடமுடியாது” என்று தெரிவித்தனர்.
மேலும் உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள ஷாயி ஈத்கா மசூதியில் ஆய்வு செய்வதற்காக ஆணையரை நியமிக்கும் அலகாபாத் உயர் நீதிமன்ற அனுமதிக்கு, உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலக் தடைவிதித்துள்ளது. ஆய்வு செய்ய உள்ளூர் ஆணையரை நியமிக்க கோரும் மனு தெளிவற்றது என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கு தடைவிதித்தும், இதுதொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடந்து நடத்தலாம் என்றும் கூறியுள்ளது.