சோனியா காந்தி உணர்ச்சிமிகு கடிதம்
டெல்லி, நவ. 5–
மக்களை பிரித்தாளும் பாஜக.வின் சித்தாந்தத்தை முறியடிக்க தந்தை பெரியாரின் கொள்கைகள் தான் அடித்தளமாக உள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சோனியா காந்தியை பெரியார் திடலுக்கு வருகை தர அழைப்பு விடுத்தும், இந்தியா கூட்டணி முன்னெடுக்கும் பணிகளை பாராட்டியும் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சோனியா காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சோனியா காந்தி கூறி இருப்பதாவது:–
பெரியாரின் தொலைநோக்குப் பார்வை
பெரியார் திடலுக்கு தன்னை அழைத்தற்கும், ‘இந்தியா’ கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் நன்றி. விளிம்புநிலை சமூகங்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு, தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வையே வழி வகுத்ததாகவும், நாடு முழுவதும் சமூகநீதி இயக்கங்களுக்கு பெரியாரின் பார்வையும் உறுதியும் இன்றுவரை ஊக்கப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறும்போது, ‘இந்தியா’ கூட்டணி ஒரு அரசியல் கூட்டணியை விட மேலானது என்ற கருத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள சோனியா காந்தி, சமூக நீதி, முற்போக்கான செயல்திட்டத்தின் மூலமே பாஜகவின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியும் என்று இந்தியா கூட்டணி நம்புவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.