டெல்லி, நவ. 5–
டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, பள்ளிகளை நவம்பர் 10ஆம் தேதி வரை மூட ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.
தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்துள்ளது. காற்றில் கலக்கும் நச்சுக் காற்று தற்போது மக்களின் உடல் நலத்தைக் கெடுத்து வருகிறது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனுடன், இருமல், நரம்புத் தளர்ச்சி மற்றும் கண்களில் எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகளையும் மக்கள் சந்திக்கின்றனர்.
10 ந்தேதி வரை விடுமுறை
இது குறிப்பாக ஆஸ்துமா மற்றும் இதய நோயாளிகளுக்கு இது வழி வகுக்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, தொடக்கப் பள்ளிகளை நவம்பர் 10ஆம் தேதி வரை மூட ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.
இத்தகவலை டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி சமூக வலைதளமான எக்ஸில் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் தனது பதிவில், மாசு அளவு அதிகமாக உள்ளது, எனவே டெல்லியில் தொடக்கப் பள்ளிகள் நவம்பர் 10 ந்தேதி வரையில் மூடப்படும் என்று கூறியுள்ளார். மேலும் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறுவதற்கும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.