செய்திகள்

பருவ காலத் தொற்று: முகக்கவசம் அணிய மக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை, நவ. 25–

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன், பருவ காலத்தில் பரவும் இன்ப்ளூயன்சா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

அதேபோன்று, பருவ கால தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் நோயின் தீவிரத்தைப் பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:–

அண்மைக் காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ப்ளூ வைரஸ்களால் பரவும் இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. அவை நேரடியாக நுரையீரலைப் பாதிக்கக் கூடியது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.

மற்றொருபுறம் மருத்துவர்கள் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை. ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேவேளையில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள்பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்பவர்கள், கர்ப்பிணிகள், புற்றுநோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்களுக்கு ‘ஓசல்டாமிவிர்’ எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும்.

அதேபோன்று தீவிர பாதிப்புக்குள்ளானவர்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைவு, சீரற்ற இதயத்துடிப்பு, வலிப்பு, சிறுநீர் அளவு குறைவு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும். ‘ஓசல்டாமிவிர்’ உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம்.

மருத்துவத் துறையினர், சுகாதாரக் களப் பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் மூன்று அடுக்கு முகக் கவசங்களை அணிய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *