டெல்லி, மார்ச் 21–
நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தங்கள் நாடுகளுக்குச் வருமாறு ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகிய இருவரும் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைன்– ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன. ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீண்டும் அதிபர் ஆகியுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தங்கள் நாட்டுக்கு வருமாறு ரஷ்ய அதிபர் புதின், மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
இருவரும் அழைப்பு
இதையடுத்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்குப் பிறகு தங்கள் நாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி கடைசியாக 2018ம் ஆண்டு ரஷ்யா சென்றார். பிரதமர் மோடியிடம் பேசியது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை அதிகரிக்க வேண்டும்.
உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு, மனிதாபிமான உதவி ஆகியவற்றிற்கு இந்தியா ஆதரவளித்து வருவதற்கு பிரதமர் மோடியிடம் நன்றி தெரிவித்தேன். இந்திய மாணவர்கள் மீண்டும் உக்ரைன் வந்து படிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் விருப்பம் தெரிவித்தேன் என அறிக்கையில் ஜெலன்ஸ்கி கூறி இருந்தார்.