இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் 5 வது நாள்
கோஹிமா, ஜன. 18–
அசாமில் 5 வது நாள் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மேற்கொண்ட ராகுல்காந்தி, ஊழல் நிறைந்த ஆட்சியை பாஜக நடத்துகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த 14 ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். இன்று 5 வது நாளில் அசாம் மாநிலத்தில் சிவசாகர் மாவட்டத்தில் பயணத்தை மேற்கொண்டார்.
பாரதீய ஜனதாவின் அநீதி
அந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது: –
நாங்கள் மணிப்பூரிலிருந்து இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை துவக்கி உள்ளோம். இந்த பயணம் இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும் சாதிகளையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது. பாரதீய ஜனதா கட்சி பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக நாட்டு மக்களுக்கு நிறைய அநீதி இழைத்துள்ளது.
நாடக ஆசிரியரும், சீர்திருத்தவாதியுமான சங்கர்தேவ் அனைவரையும் ஒன்றிணைக்க முயன்றார். அவர் அநீதிக்கு எதிராக போராடினார். இதனை தான் இந்திய ஒற்றுமை நீதி பயணமும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மணிப்பூரில் உள்நாட்டு போர் சூழல் நிலவுகிறது.
ஆனால், பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை. நாகாலாந்தில் பிரதமர் அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்று மக்கள் கேட்கின்றனர். அசாமில் ஊழல் நிறைந்த ஆட்சி நடக்கிறது என்று ராகுல் காந்தி பேசினார்.