சென்னை, டிச. 11–
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரெயில், செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே நேற்றிரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால், செங்கல்பட்டு–கடற்கரை இடையிலான மின்சார ரெயில் இயக்கத்தில் பாதிப்பு எற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில், நேற்று இரவு 10.30 மணியளவில் செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. இதையடுத்து தண்டவாளத்தை சீரமைத்து ரெயில் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மின்சார ரெயில்கள் தாமதம்
இதனால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பயணிகள் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை கடற்கரை–செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. அத்துடன் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள் சிங்கபெருமாள் கோயில் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.