செய்திகள் நாடும் நடப்பும்

புற்று நோயில்லா தமிழகம் : முதல்வர் ஸ்டாலினின் முற்போக்கான திட்டம்


ஆர். முத்துக்குமார்


கொரோனா பெரும்தொற்று நமக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு சென்றுள்ள ஒரு பாடம்

‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

வாய் நாடி வாய்ப்பச் செயல் ’

என்பதாகும்.

இது திருவள்ளுவரின் வாக்கு, குணக் குறிகளால் நோயை துணிந்து, அதன் காரணத்தை தெளிந்து கண்டுபிடித்து, தீர்க்கும் வழியையும் அறிந்து, செய்வதை பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள்.

இந்தியாவில் தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதால் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குப் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடங்கப்படுகிறது என்று அரசு முடிவெடுத்து இருக்கிறது.

இந்தியாவில் 2030-ம் ஆண்டுக்குள் இருதயம், புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் தொற்றா நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ளும் திட்டத்தை, பொது சுகாதாரத் துறை செயல்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக, ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அம்மாவட்டங்களில் வீடு, வீடாக அழைப்புக் கடிதத்தை சுகாதாரப் பணியாளர்கள் வழங்கி வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:– ‘‘மூன்று விதமான புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக வாய் புற்றுநோய் இருபாலருக்கும் வருகிறது. அதனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். 3 ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் மறுபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அதேபோல் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் ஆகிய பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம் ஆகும். புற்றுநோயை பொறுத்த வரையில், ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

அந்த வகையில் 4 மாவட்டங்களில் 19 லட்சம் பெண்கள் உட்பட 52 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய இருக்கிறோம். அதன்பின் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனையை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இது ஓர் உன்னதமான துவக்கம், தமிழகம் ஆரோக்கியமான மாநிலமாக உயர எடுக்கப்படும் நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டிய திட்டமும் ஆகும்.

புற்றுநோய் உட்பட பல உயிர்கொல்லி நோய்களுக்கு உண்மையான காரணங்கள், அது துவக்க நிலையில் உருவாக புறக் காரணங்கள் என்ன? போன்ற தகவல் திரட்டை கொண்டு முழுமையான ஆய்வுகள் சரிவர இருக்கிறதா? அதைப் பற்றியும் ஆய்வுகள் மேற்கொண்டால் வருங்கால சந்ததியினர் ஆரோக்கியம் பாதுகாப்பானதாக இருக்கும்.

சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மையம் பல சவாலான புற்றுநோய் பாதித்தவர்கள் பற்றிய தகவல் திரட்டு வைத்திருக்கிறது.

அவர்களின் தகவல் திரட்டை கொண்டும் மத்திய, மாநில அரசுகள் எப்பகுதியில் அதாவது எந்த மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்புகளின் தன்மையை அறிந்து அதற்கென பரிசோதனைகளை திட்டமிட்டு செயல்படுத்தினால் அது நல்ல ஆரம்பமாக இருக்கும்.

இப்படி ஒரு ஆரோக்கியமான திட்டத்தை தமிழகமெங்கும் ஆமல்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்திருக்கும் முயற்சியை தமிழகம் பாராட்டுகிறது. மேலும் நாடே இதன் கிறப்புகளை உற்றுப்பார்த்து வருங்கால திட்டங்களை வகுக்க சிந்திக்க ஆரம்பித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் முற்போக்கான திட்டங்களுக்குப் பாராட்டுக்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *