மதுரை, ஏப். 13–
நடிகர் தனுஷ் தனது மகன் என்றும் தனக்கு பாராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்த கதிரேசன் உடல்நலக் குறைவால் காலமானார்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மனைவி மீனாட்சி. இந்த தம்பதியர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷை தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டு மேலூர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
உயிரிழந்த கதிரேசன்
இந்த வழக்குகள் தள்ளுபடியானது. இருப்பினும், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சட்ட போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களது வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தற்போதும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே கதிரேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கதிரேசன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.