செய்திகள்

நாடு முழுவதும் ரூ.4,650 கோடி நகை, பணம் பறிமுதல்: இந்திய தேர்தல் கமிஷன் தகவல்

புதுடெல்லி, ஏப். 15–

நாடு முழுவதும் முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன்பு, இதுவரை ரூ.4,650 கோடி மதிப்புள்ள நகை, பணம், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என இந்திய தேர்தல் கமிஷன் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக நாடு முழுவதும் ரூ.4,650 கோடி மதிப்புள்ள மதுபானம், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கம், ரூ.395.39 கோடி, மதுபானங்கள் ரூ.489.31 கோடி, போதை பொருட்கள் ரூ.2,068.85 கோடி, இலவச பொருட்கள் ரூ.1,142.49 கோடி ஆகும்.

ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அதிகபட்சமாக அங்கு ரூ. 778 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் 605 கோடி மதிப்புள்ள மதுபானம், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2வது இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. 3வது இடத்தில் தமிழகம் உள்ளது.

தமிழகத்தில் ரூ.460 கோடி பறிமுதல்

தமிழகத்தில் மட்டும் மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரூ.460 கோடி மதிப்புள்ள நகை, பணம், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரொக்கம் ரூ.53 கோடி, போதை பொருட்கள் ரூ.293 கோடி, தங்கம், வெள்ளி பொருட்கள் ரூ.78 கோடி, மதுபானங்கள் ரூ.4.4 கோடி, இலவசப் பொருட்கள் ரூ.31 கோடி ஆகும்.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட மொத்த பணம், பொருட்கள் மதிப்பு ரூ.3475 கோடியாக இருந்தது. தற்போது முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன்பு 4650 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *