டெல்லி, மார்ச் 16–
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர் ஆகி ஜாமீன் பெற்றார்.
டெல்லி அரசின் 2021-2022ம் ஆண்டின் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது இந்த விவகாரத்தில் நடந்த பணமோசடி குறித்து வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையும் சிசோடியா உள்ளிட்டோரை கைது செய்தது. இந்த விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியும் அவற்றை கெஜ்ரிவால் நிராகரித்தார்.
ரூ.15 ஆயிரம் பிணைத்தொகை
தேவைப்பட்டால், ‘வீடியோ கான்பரன்சிங்’ வாயிலாக பதில் அளிக்க தயாராக இருப்பதாக அமலாக்கத் துறைக்கு பதில் அனுப்பினார். இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால் மீது நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்தது.
அமலாக்கத் துறையின் மனுவுக்கு, இன்று ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர் ஆனார். அப்போது, அவருக்கு ஜாமீன் வழங்கி, ரூ.15 ஆயிரம் பிணைத்தொகை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.