டெல்லி, ஏப். 04–
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றனர்.
சோனியா காந்தி ராஜஸ்தானின் சட்ட மேலவை உறுப்பினராகப் பதவியேற்ற நிலையில், ஒடிசாவில் இருந்து வைஷ்ணவ் அதே மேலவையில் பதவியேற்றார். கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஆர்பிஎன் சிங், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் சாமிக் பட்டாச்சார்யா உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவையில் பதவியேற்றனர். குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தங்கர், புதிய நாடாளுமன்ற கட்டத்தில் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்முறையாக சோனியா
ஒய்எஸ்ஆர்சிபி தலைவர்கள் கோலா பாபு ராவ், மேதா ரகுநாத் ரெட்டி, மற்றும் யெரும் வெங்கட் சுப்பா ரெட்டி ஆகியோரும் ஆந்திர மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களாகப் பதவியேற்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாநிலங்களவை தலைவருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார்.
அவைத் தலைவர் பியூஷ் கோயல் மற்றும் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் அவர் பதவியேற்றார். பதவியேற்றபோது பிரியங்கா காந்தியும் உடனிருந்தார். மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், பொதுச் செயலாளர் பி.சி. மோடி ஆகியோர் உடனிருந்தனர்.