சேலம், அக். 26–
அரசு வேலை வாங்கித் தருவதாக முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மேச்சேரி சாம்ராஜ் நகரைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ராஜூ. இவரது மகனுக்கு, வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பாஜக நிர்வாகி கமலக்கண்ணன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதனை நம்பிய ராஜூ பல தவணைகளாக 35 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார்.
போலி பணியாணை
இதனையடுத்து பணிக்கான ஆணையையும் கமலக்கண்ணன் கொடுத்துள்ளார். ஆனால் அவர் கொடுத்த பணியாணை போலியானது என்பது தெரியவந்த நிலையில், பணம் வாங்கிக் கொண்டு தங்களை ஏமாற்றியதாக ராஜூ காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய சேலம் காவல்துறையினர் தலைமறைவாக இருந்த கமலக்கண்ணன் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.