சென்னை, மார்ச் 21–
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இதுகுறித்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ஜ.க. எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அடிமை அண்ணா தி.மு.க.வை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணி வகிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும். மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க ‘இந்தியா கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் தி.மு.க.வை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.
இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்திய பெருமுதலாளிகளின் கையில் கார்ப்ரேட்டின் கொள்ளைக் கூடாரமாகிவிடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழ்நாட்டில் அடிமை துரோகக் கட்சியான அண்ணா தி.மு.க.வை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.
தி.மு.க.விற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக்கூட்டணியை 40 இடங்களிலும் வெற்றிப்பெற செய்ய தி.மு.க.விற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட, அடிமை துரோக அண்ணா தி.மு.க.வை வீழ்த்த தி.மு.க.வுடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.