சென்னை, நவ. 28–
‘சேரி’ என்ற வார்த்தையை குஷ்பு பயன்படுத்தியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா பற்றி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்தார். அப்போது சமூக வலைத்தளத்தில் குஷ்புவுக்கு எதிராக பதிவிட்டவருக்கு அளித்த பதிவில் சேரிமொழி என்று குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் எஸ்.சி. துறை கண்டனம் தெரிவித்தது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தியது.ஆனால் ‘சேரி’ என்ற பெயரில் எத்தனையோ ஊர்கள் உள்ளன. பிரஞ்சு மொழியில் சேரி என்பதற்கு அன்பு என்று அர்த்தம். நல்ல எண்ணத்தோடு வெளியிட்ட பதிவை உள்நோக்கத்தோடு எதிர்த்தால் நான் பொறுப்பல்ல. எனவே வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று மறுத்துவிட்டார்.
ஆனால் காங்கிரஸ் எஸ்.சி. துறையினர் குஷ்பு மன்னிப்பு கோர வலியுறுத்தி மாநில தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் இன்று குஷ்பு வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதையொட்டி இன்று காலை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் சென்னை சாந்தோம் பிரதான சாலையில் உள்ள நடிகை குஷ்பு வீட்டின் முன்பு கூடினர். மாநில எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள்.