அகமதாபாத், நவ. 21–
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் தோல்வி அடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆறுதல் கூறினார்.
இந்திய அணியினரின் ஓய்வறைக்கு சென்ற பிரதமர் மோடி, ரோகித் சர்மா, விராட் கோலி, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா என்று ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் பாராட்டி தனது ஆறுதலை கூறியுள்ளார். அவர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட அனைத்து வீரர்களின் கைகளை பிடித்து நம்பிகை்கை அளித்து பாராட்டினார். அப்போது பந்து வீச்சாளர் ஷமியை பார்த்த பிரதமர் மோடி அவரை கட்டி அணைத்து, அவரது முதுகில் தட்டிக் கொடுத்தார்.
உலகக் கோப்பையின் மூலம் உங்களின் திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரவீந்திர ஜடேஜா நன்றி
இதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா கூறியிருப்பதாவது:நாங்கள் ஒரு சிறந்த போட்டியைக் கொண்டிருந்தோம், ஆனால் நேற்று குறுகிய காலத்தில் போட்டி முடிந்தது. நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள்ளோம், ஆனால் எங்கள் மக்களின் ஆதரவு எங்களை தொடர்ந்து வழி நடத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி டிரஸ்ஸிங் ரூமிற்கு வந்தது சிறப்பானது மற்றும் மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது என்று ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.