திருத்தணி.டிச.8-
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் இவர் திருத்தணி பேருந்து நிலையத்தில் ஹோட்டல் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை சங்கர் மனைவி கிருஷ்ணவேணி தனது வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டு இருந்த போது அவ்வழியாக நடந்து சென்ற வாலிபர் ஒருவர் திடீரென்று கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.
கிருஷ்ணவேணி கூச்சலிட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் துரத்திப் பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருத்தணி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.