காபூல், அக். 8–
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்களை தாலிபான் அரசு வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5.5 ரிக்டர் அளவு கொண்ட பின்னதிர்வு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 பேர் பலி
இந்த நிலநடுக்கத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தாலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் சர்வதேச ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்ட்ட ஜெண்டா ஜன் நகரில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக 12 அவசரகால ஊர்திகளை அனுப்பியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உலக சுகாதார அமைப்பின் குழுவினர் மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உள்ளூர் அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளோம்’ என தெரிவித்துள்ளனர்.