டெல்லி, ஜன. 04–
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து பொருள்கள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எய்ம்ஸ் மருத்துவமனையின் 2 வது மாடியில் கற்பித்தல் பிரிவில் இயக்குநர் அலுவலகத்துக்குள் தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
யாருக்கும் பாதிப்பில்லை
இந்த விபத்தில் யாரும் படுகாயம் அடையவில்லை. சில கோப்புகள், அலுவலகப் பதிவுகள், குளிர்சாதனப் பெட்டி மற்றும் அலுவலக தளவாடங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
மருத்துவமனை அதிகாரிகள் சேதத்தின் அளவை மதிப்பீடு செய்து வருகின்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கல்வி நடவடிக்கைகளில் கற்பித்தல் பிரிவு முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்த பிரிவை உடனடியாக சீரமைக்கும் பணிகளையும் மருத்துவமனை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.