சென்னை, மார்ச் 31–
தேர்தலில் வாக்களிப்பதற்கான கையொப்பமிட்ட உறுதிமொழியை 4 லட்சம் வாக்காளர்களிடம் இருந்து 12 மணி நேரத்துக்குள் பெற்று சென்னை மாநகராட்சி சாதனை படைத்துள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வடசென்னை மக்களவைத் தொகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் 4,10,988 வாக்காளர்களிடம் இருந்து தேர்தலில் வாக்களிப்பதற்கான கையொப்பமிட்ட உறுதிமொழி படிவத்தை 12 மணி நேரத்துக்குள் பெற்று சென்னை மாநகராட்சி உலக சாதனை படைத்துள்ளது.
மாநகராட்சி சாதனை
இதனை அங்கீகரிக்கும் வகையில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகியவற்றின் சார்பில் உலக சாதனை மேற்கோள் சான்றிதழ்கள், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்ஆர்.லலிதா, தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டா ரவி தேஜா ஆகியோரிடம் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நேற்று வழங்கப்பட்டது.
குறுகிய காலத்துக்குள் இவ்வளவு கணிசமான எண்ணிக்கையிலான உறுதிமொழிகளை திரட்டியதன் மூலம், வாக்குப்பதிவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உறுதியான அர்ப்பணிப்பை அந்தத் தொகுதி வெளிப்படுத்தியிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. வாக்காளர்களின் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு திட்ட செயல்பாட்டின் ஒரு பகுதியாக இந்தசாதனை முயற்சி நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.