டெல் அவீவ், அக். 16–
காசாவில் ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளான இஸ்ரேலிய குடிமக்களை விடுவிக்குமாறு போப் பிரான்சிஸ் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற நேற்றைய பிரார்த்தனையின் போது, ‘இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது என்பதை நான் அறிந்து வருகிறேன். நான் பலரைப் பற்றி கவலைப்படுகிறேன். குறிப்பாக சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் மீது அதிக கவலை கொள்கிறேன் என்றும் கூறினார்.
ரத்தம் சிந்த வேண்டாம்
கடந்த வாரம் தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான தனது அழைப்பை போப் மீண்டும் வலியுறுத்தினார். ‘குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மோதலுக்கு பலியாக வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் காசாவில் துன்பத்தில் உள்ள மக்களுக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனிதாபிமான சட்டம் மதிக்கப்பட வேண்டும். குறிப்பாக காசாவில் அனைத்து மக்களுக்கும் மனிதாபிமான அணுகலும் பாதுகாப்பும் தேவை. புனித பூமியிலோ, உக்ரைனிலோ அல்லது வேறு எங்கும் அப்பாவி மக்களின் ரத்தத்தை சிந்த வேண்டாம்’ என்று போப் பிரான்சிஸ் ‘உலகிற்கு வேண்டுகோள் விடுத்தார்.