செய்திகள்

ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ராமேஸ்வரம், பிப். 28–

பலத்த சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதற்கேற்றாற் போல் ராமேசுவரம் கடல் பகுதி இன்று காலை வழக்கத்தைவிட மாறுபட்ட நிலையில் காணப்பட்டது.

இதற்கிடையே மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மறு அறிவிப்பு வரும் வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களிலும், நடுக்கடலில் நங்கூரமிட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேருக்கு இலங்கை அரசு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து காலவரையற்ற போராட்டத்தை தொடங்கிய நிலையில் குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து ராமேசுவரத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம் சென்ற அவர்களிடம் கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். 8 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் சூறைக் காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்து உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *