சென்னை, ஜன.7–
லட்சத்தீவு பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், காற்று குவிதல் காரணமாகவும் சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது:-–
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வடகிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றும், தென்கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றும் ஒன்றாக சேர்ந்து காற்று குவிதல் ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக வட தமிழக பகுதிகளில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதியில் கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று மாலை மற்றும் இரவிலும், நாளையும் மேற்கண்ட மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது.
தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும்.
ராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், நெல்லை மாவட்டத்தில் மலையோர பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வருமாறு:–
சிவகாசி – 11 செ.மீ, சீர்காழி, நாலுமுக்கு தலா 7 செ.மீ, பிளவக்கல் பெரியாறு அணை 6 செ.மீ, காரைக்கால், அண்ணாமலை நகர், தரங்கம்பாடி, நாகை, வெம்பக்கோட்டை, காக்காச்சி, கன்னடயன் அணைக்கட்டு, பாபநாசம், ஊத்து, மணிமுத்தாறு, மாஞ்சோலை தலா 5 செ.மீ, செம்பனார்கோவில், சிதம்பரம், ராஜபாளையம், நன்னிலம், சேர்வலாறு அணை தலா 4 செ.மீ, ஆண்டிபட்டி, கொள்ளிடம், மயிலாடுதுறை, எழுமலை, பெரியகுளம், பரங்கிப்பேட்டை, ராமநதி அணைப்பகுதி, மரக்காணம், சின்னக்கல்லார், கிண்ணக்கோரை, அம்பாசமுது்திரம், கடலூர், வத்திராயிருப்பு, வலங்கைமான், உசிலம்பட்டி தலா 3 செ.மீ, மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.