செய்திகள்

சிக்கிமில் திடீர் மேகவெடிப்பால் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்

காங்டாக், அக். 4–

வடகிழக்கு மாநிலமான சிக்கிம்மில் உள்ள லாச்சென் பள்ளத்தாக்கில் இன்று காலை மேகவெடிப்பு காரணமாக டீஸ்டா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ராணுவ வாகனங்கள் நீரில் மூழ்கியதில் 23 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ளனர்.

இது குறித்து குவாஹாட்டி ராணுவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

சிக்கிம் மாநிலத்தின் லான்சன் பள்ளத்தாக்கில் இன்று காலை டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ராணுவ வாகனங்கள் மூழ்கின. 23 ராணுவ வீரர்கள் மாயமான நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தினரை தேடும் பணி

சிங்டம் அருகே பர்டாங் எனும் பகுதியில் ராணுவ வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென சுங்தங் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் நீர்மட்டம் 15 முதல் 20 அடிக்கு உயர்ந்தது. இதில்தான் ராணுவ வாகனங்கள் மூழ்கியுள்ளன. சில வாகனங்கள் சேற்றில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மேகவெடிப்பு நிகழ்ந்தவுடன் சிக்கிம் முழுவதும் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. திடீர் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் முதல்வர் பிரேம் சிங் தமங் பாதிப்புகளை ஆய்வு செய்தார். இவை ஒருபுறம் இருக்க ராணுவ வீரர்களைத் தேடும் பணியும் நடந்து வருகிறது.

மேகவெடிப்பு என்பது, சாதாரணமாக மேகம் உருவாகும் நேரத்தை விட குறைந்த நேரத்தில் மழைமேகம் உருவாகி மணிக்கு 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழையை ஒரே இடத்தில் கொட்டித் தீர்ப்பதுதான் மேகவெடிப்பு. இந்த அதீத மழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு முதலியன நிகழ்கிறது. கடந்த மாதம் இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த நிலச்சரிவில் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *