செய்திகள்

செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை நாளை வெளியிடப்படும்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, நவ. 21–

செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை நாளை வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.அவர் அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தூக்கம் இல்லாத காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியும் இருந்தார். மனரீதியாகவும் அவர் பாதிக்கப்பட்டதால் உடல் எடையும் குறைந்தது.இதனால் கடந்த 15-ந்தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் இதயவியல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்த்ததில் கனையத்தில் கொழுப்புக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதற்கு சிகிச்சை பெற வேண்டி உள்ளதால் இன்னும் 2 நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பார் என தெரிகிறது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சரிவர தூக்கம் இல்லாத பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளன. கழுத்துவலி, முதுகுவலி, கால்வலி, பிரச்சனைகளும் உள்ளதால் அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனையத்தில் கொழுப்பு கட்டி இருப்பதால் அதை மருந்து -மாத்திரைகள் மூலம் சரிப்படுத்த டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு இன்னும் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதால் அதன் முடிவுகளை வைத்து அறிக்கை தயாரிக்கப்படும். இந்த அறிக்கை விவரங்கள் நாளை வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *