செய்திகள்

காங்கிரஸ் கட்சியுடன் பாரதீய ஜனதா நேரடியாக மோதும் 9 தொகுதிகள்

சென்னை, மார்ச் 23–

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 8 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட இடங்களில் காங்கிரசின் கை சின்னமும் பாரதீய ஜனதாவின் தாமரையும் நேரடியாக மோதுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தற்போது தங்கள் கட்சி சார்பில் போட்டியிட கூடிய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. மற்றொரு தேசிய கட்சியான பா.ஜனதா, பா.ம.க., தமாக உள்ளிட்ட ஏராளமான கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதீய ஜனதா ஆகிய இரு கட்சிகளும் தமிழ்நாட்டில் 7 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

மொத்தம் 9 தொகுதிகள்

அதாவது, திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 6 தொகுதிகளில் நேரடியாக இரண்டு தேசிய கட்சிகளும் மோதுகின்றன. சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது. ஆனால், பாரதீய ஜனதா சின்னமான தாமரையில் களம் காண்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி- பாரதீய ஜனதா இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியுடன் பாரதீய ஜனதா நேரடியாக மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் (தனி) தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பா.ம.க.வும் நேரடியாக மோதுகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தற்போதைய எம்.பி. ரவிக்குமாரும், பா.ம.க. சார்பில் முரளி சங்கரும் நிற்கின்றனர். இதேபோல், திருச்சியில் அ.தி.மு.க.வும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வும் எதிர்த்து நிற்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *