மும்பை, அக். 9–
இந்தி நடிகர் ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ள நிலையில் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் பதான், ஜவான் ஆகிய இரு படங்கள் வெளியாகியுள்ளன. இந்த இரு படங்களுமே பாக்ஸ் ஆபிசில் ஹிட்டாகியுள்ளது. ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இதன் மூலம் ஒரே ஆண்டில் ரூ.1000 கோடி வசூலை அள்ளிய ஹீரோ என்ற பெருமையை ஷாருக்கான் பெற்றுள்ளார். இந்த இரு படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது டங்கி எனும் திரைப்படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார்.
இதை ராஜ்குமார் ஹிராணி இயக்கி வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதனால் ஷாருக்கானுடன் எப்போதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் 6 பேர் உடனிருப்பார்கள். இந்தியா முழுவதும் அவர் எங்குச் சென்றாலும் இந்த 6 பேரும் அவருடன் செல்வார்கள். இது தவிர ஷாருக்கானின் வீட்டிற்கு ஆயுதம் ஏந்திய போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்ட வண்ணம் இருப்பார்கள்.
ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டுள்ள ஒய் பிளஸ் பாதுகாப்பில் எம்பி 5 எந்திர துப்பாக்கிகள், ஏகே 47 ரக துப்பாக்கிகள், க்ளோக் பிஸ்டல்கள் இருக்கும். ஏற்கனவே கொலை மிரட்டல் காரணமாக நடிகர் சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.