தான்சான்யா, மார்ச் 10–
தான்சானியாவில் பெம்பா தீவைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் 78 பேர் உடல்நலக்குறைவு காரணமாக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட மருத்துவ அலுவலர் பக்காரி ஹாஜி கூறுகையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்தோம். அவர்கள் கடல் ஆமை கறி சாப்பிட்டது தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் கடல் ஆமை இறைச்சியை சாப்பிட்டுள்ளனர்.
78 பேருக்கு சிகிச்சை
ஆனால் சொன்னால் திட்டுவார்களோ என்று பயந்து மார்ச் 8 ந்தேதி வரை வெளியே சொல்லாமல் இருந்தார்கள். அதன் பிறகு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு வந்த பிறகுதான் இந்த உண்மை வெளிவந்தது” என்றார். தற்போது 78 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே மார்ச் 2023 இல், தான்சானியாவின் இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள மாபியா தீவில் உள்ள பிவேனி கிராமத்தில் கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்ட 7 பேர் இறந்த நிலையில் 8 பேர் நோய்வாய்ப்பட்டனர். தற்போது மீண்டும் அதே சம்பவம் நடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.