எங்கு சென்றாலும் நண்பர்கள் புடை சூழச் செல்வார். சீனிவாசன் மனிதர்களோடு சேர்ந்திருப்பது அவருக்கு மகத்தான மகிழ்வை தருகிறது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.
மனுசனத் தவிர இந்த உலகத்துல வேற ஏதும் பெரிய சந்தோஷம் இல்லைங்க என்று வாய்கிழியச் சொல்லும் சீனிவாசன் உணவகத்திற்கு செல்லும் போது மட்டும் வேறு மாதிரியாக திரும்பி விடுவார் .
ஒவ்வொரு முறை நண்பர்களோடு உணவகம் செல்லும்போது எல்லோரும் என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்பார்.
நீங்க என்ன சாப்பிடுறீங்களோ அதையே எங்களுக்கும் சொல்லுங்க என்று சொல்வார்கள் உடன் வருபவர்கள்.
நான் பல்லி, கரப்பான் பூச்சி சாப்பிடுவேன் அதையே நீங்க சாப்பிடுவிங்களா என்று அதட்டி சொல்வார் சீனிவாசன்.
சீனிவாசன் பேசுவதைக் கேட்டு பயந்து போனவர்கள் தமக்கு இட்லி தோசை என்று ஆர்டர் கொடுத்த பிறகு
தனக்கான உணவை கொண்டுவரச் சொல்வார் சீனிவாசன்.
நீங்க ஆர்டர் பண்ணது தான் சொல்லி இருப்பேன். ஆனா வாய் வரல என்று என்று நண்பர்கள் கூறினால்
அது என்னுடைய சுதந்திரம் அதுக்காக 300 ரூவா விக்கிற பொருளை நீ கேட்ப. அத நான் வாங்கி உனக்கு கொடுக்க முடியுமா? நீ சாப்பிடுற பொருள் விலை நான் சாப்பிடுற பொருள் விலை என்னன்னு உனக்கு தெரியுமில்ல .
நான் சாப்பிடுறத எங்களுக்கும் வாங்கி கொடுங்கன்னு சொல்லிட்டா பில் ரூ.10,000க்கு வந்துருமே. என்ன பண்றது ? அதுக்கு தான் முதல்ல நீங்க என்ன சாப்பிடுறீங்க ன்னு கேட்டுட்டு அதை பார்த்துட்டு தான் நான் என்க்கு ஆர்டர் கொடுப்பேன். அதைத்தான் வழக்கமா வச்சிருக்கேன். ஏன்னா ஓசில சாப்பிடுற எவனும் அதிகமான விலை விக்கிற பாெருள கேட்க மாட்டான் .சாப்பிட மாட்டான். ஏன்னா காசு கொடுப்பது நான் தானே? என்று சிரித்துக் கொண்டே சொன்னார் சீனிவாசன்
ஐயா பயங்கரமான ஆளா இருப்பார் போல ? இனிமே அவர் என்ன சொல்றாரோ அதையே தான் நாம சாப்பிடணும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார்கள் நண்பர்கள்.
அடுத்த முறை ஒரு வேலையை முடித்துவிட்டு உணவகத்திற்குச் சென்ற சீனிவாசன் மற்றவர்கள் கேட்பதற்கு முன்னாலே இவங்க அத்தனை பேருக்கும் இட்லி கொண்டு வந்து வைக்கச் சொன்னார்.
பெரியவரே சொல்லிட்டாரு இனி தட்டுனா தப்பா நினைப்பாரு என்று வேண்டா வெறுப்பாக இட்லியை சாப்பிட ஆரம்பித்தார்கள் நண்பர்கள்.
சீனிவாசனுக்கு சொட்ட சொட்ட நெய் தோசை மேசைக்கு வந்தது.
இதைப் பார்த்தவர்கள் எச்சில் ஊறியது தான் மிச்சம் என்று நினைப்பார்கள்.
இப்படி ஒவ்வொரு முறையும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் சீனிவாசன் எப்போது மாட்டுவார்? என்பது யாருக்கும் தெரியும்.