சென்னை, அக். 7–
பராமரிப்புப் பணி காரணமாக இன்று இரவு முதல் நாளை காலை வரை 14 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:–
சென்னை பேசின்பிரிட்ஜ் சந்திப்பு – வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்கள் இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் இன்று இரவு 11.30 முதல் மறுநாள் காலை 6.30 மணி வரை 7 மணிநேரம் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. அதன் காரணத்தால், அந்த 7 மணி நேரத்துக்கு பேசின்பிரிட்ஜ் சந்திப்பு மற்றும் வியாசா்பாடி ஜீவா ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் 14 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பகுதி நிறுத்த ரெயில்கள்
அதேபோல், இன்று இரவு 10.45 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்தும், இரவு 9.45 மணிக்கு திருத்தணியிலிருந்தும் சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ஆவடியுடன் நிறுத்தப்படும்.
அதேபோல், நாளை சென்ட்ரலிலிருந்து அதிகாலை 3.50 மணிக்கு திருத்தணிக்கும், அதிகாலை 5 மணிக்கு திருவள்ளூருக்கும் செல்லும் மின்சார ரெயில்கள் சென்ட்ரலுக்கு பதிலாக ஆவடியிலிருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.