செய்திகள்

ஆசாமில் 11வது நாள் யாத்திரை நான் பயப்படமாட்டேன்: ராகுல் ஆவேச பேச்சு

பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: அமித்ஷாவுக்கு கார்கே கடிதம்

கவுஹாத்தி, ஜன. 24–

என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள். நான் பயப்பட மாட்டேன்” என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 14ம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தவுபல் நகரில் இருந்து பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். யாத்திரையின் 10வது நாளான நேற்று அசாமின் குவாஹாட்டி நகருக்கு அவர் பாத யாத்திரையாக சென்றார். சுமார் 5,000-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களும் அவருடன் சென்றனர்.

அப்போது குவாஹாட்டி நகருக்குள் ராகுல் காந்தி நுழைய அசாம் போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக போலீசாருக்கும் காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை காங்கிரசார் அகற்றினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “அசாம் மிகவும் அமைதியான மாநிலம். நக்சலைட் அணுகுமுறை எங்கள் கலாச்சாரத்துக்கு எதிரானது. ராகுல் காந்தி மக்களை தூண்டி விடுகிறார். வன்முறை தொடர்பான வீடியோவை காங்கிரசாரே வெளியிட்டு உள்ளனர்.

இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து ராகுல் மீது வழக்கு பதிவு செய்ய அசாம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். காங்கிரசாரின் வன்முறையால் குவாஹாட்டியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

நான் பயப்பட மாட்டேன்

இதற்கிடையில் ராகுல் காந்தி தனது 11வது நாள் யாத்திரையை இன்று காலை தொடங்கினார். அசாமின் பார்பேட்டாவில் யாத்திரையில் ஈடுபட்டுள்ளா ராகுல் பேசியதாவது:–

நாட்டில் ஊழல் நிறைந்த முதல்வர் என்றால் அது அசாம் முதல்வர் தான்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இயக்குகிறார். அமித் ஷாவுக்கு எதிராக எதையும் சொல்லத் துணிந்தால், அவர் தூக்கி எறியப்படுவார். ராகுலை பயமுறுத்தலாம் என்ற எண்ணம் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.

என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள். நான் பயப்பட மாட்டேன். ஜாதி, மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்த பாரதீய ஜனதா முயற்சி செய்கிறது. பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் மணிப்பூரை எரித்துவிட்டது. ஆனால் நாட்டின் பிரதமர் மணிப்பூருக்கு இதுநாள் வரை செல்லவில்லை.

நமது பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மணிப்பூரில் துவங்கி உள்ளது. மஹாராஷ்டிரா வரை செல்லும். வன்முறையும் வெறுப்பும் யாருக்கும் பயனளிக்கப் போவதில்லை.

இவ்வாறு ராகுல் பேசினார்.

ராகுல் பாதுகாப்பு உறுதி செய்யுங்கள்

அசாமில் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று அமித்ஷாவுக்கு கார்கே எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

“அசாம் போலீசார் தொடர்ச்சியாக ராகுல் காந்தியின் பாதுகாப்பு வளையத்தை பாஜக தொண்டர்கள் உடைத்து நெருங்க அனுமதிக்கின்றனர் அல்லது மீறல்களை கண்டு கொள்ளாமல் துணை நிற்கின்றனர். ராகுலுக்கும் அவருடைய குழுவினரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர்.

அசாமில் யாத்திரையின் முதல் நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும் பல்வேறு இடையூறுகள் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துனை இடையூறுகளுக்கு மத்தியிலும் ராகுல் காந்தி திட்டமிட்டபடி யாத்திரையை மேற்கொண்டுள்ளார். அதனால் நீங்கள் தலையிட்டு அசாம் முதல்வரும், காவல்துறை டிஜிபியும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும். ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து ராகுல் காந்திக்கு தனிப்பட்ட முறையில் பெரிய பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் இதில் தலையிட்டு அவருடைய, யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *