சென்னை, பிப். 21–
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் வெப்பநிலை, இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:–
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை. வெப்பநிலை பொறுத்தவரை அதிகபட்சமாக ஈரோட்டில் 37 டிகிரி செல்சியஸ், நாமக்கல்லில் 17.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது.
இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது
நாளை, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட மாவட்டம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 32– 33 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்சமாக 22– 23 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.