மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
மயிலாடுதுறை, அக். 26–
வீட்டின் கதவை உடைத்து 52 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து, மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஜலில். வெளிநாட்டில் உள்ள இவருக்கு சஹிதா பானு என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில் இளைய மகள் திருச்சியில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த இளைய மகளை சஹிதா பானு நேற்று ரயிலில் அழைத்துச் சென்று திருச்சியில் உள்ள கல்லூரியில் விட்டு விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.
பணம், நகை கொள்ளை
அப்போது வீட்டை திறந்து பார்த்த போது பின் பக்க கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் அறையில் சென்று பார்த்தபோது பீரோவில் கதவுகள் திறக்கப்பட்டு அதிலிருந்து 52 பவுன் தங்க நகை மற்றும் ரூ 2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சஹிதா பானு அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. மீனா, டிஎஸ்பி. சஞ்சீவ் குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தியதுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.