டெல்லி, அக். 31–
பயண தூரத்தை குறைக்கும் வகையிலும், 15 கிலோமீட்டருக்கு பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை நாளை தொடங்கப்பட உள்ளது.
இந்தியாவின் திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா, வங்க தேசத்தின் அகவ்ரா நகர் இடையே, எல்லை தாண்டிய இணைப்பு ரெயில் சேவை (Agartala – Akhaura Cross Border Rail Link Project) என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி 5 கிலோ மீட்டர் தூரம் இந்தியாவிலும், 10 கிலோ மீட்டர் தூரம் வங்கதேசத்திலும் இந்த ரெயில் சேவை நீள்கிறது.
மோடி–ஹசீனா பங்கேற்பு
இச்சேவை, இந்தியாவின் திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா நகரிலிருந்து வங்கதேசத்தின் அகவுரா நகர் வரை செல்கிறது. இடையில் இரு நாட்டு எல்லைப்பகுதியில் புதிதாக அமைப்பட்டுள்ள நிஸ்சிந்தாபூர் (Nischintapur) சர்வதேச குடியேற்ற மைய ரெயில் நிலையத்தில் ரெயில் நின்று செல்லும். அங்கு பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்படும்.
இந்த நீண்ட ரெயில் தடத்தில் ஒரு பெரிய பாலமும், மூன்று சிறிய பாலங்களும் அமைந்துள்ளன. தற்போது, அகர்தலாவிலிருந்து ரயில் வழியாக கொல்கத்தாவை அடைய தற்போது 31 மணி நேரம் எடுக்கும் பயண நேரம், இந்த சேவையின் மூலம் 10 மணி நேரமாக குறையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய ரயில்வே, தன் பங்கிற்கு சுமார் ரூ. 155 கோடி வரை இதற்காக செலவிட்டுள்ளது. இருநாட்டுக்கு இடையேயான இந்த ரெயில் சேவையை நாளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி மூலமாக காலை 11:00 மணியளவில் ஒன்றிணைந்து தொடங்கி வைக்கின்றனர்.