செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை, அக். 19–

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் அவருடைய மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். முன்னதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை கடந்த செப்டம்பர் 20 -ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 முறை ஜாமீன் மறுக்கப்பட்டு இருந்தது. மேலும் செந்தில் பாலாஜியின் காவல் 8 வது முறையாக நீடிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

இந்த சூழலில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அறிக்கை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை சார்பில் ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதிட்டார். அப்போது உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் 45 வது பிரிவு பொருந்தாது என தெரிவித்தார். வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று காலை 10.40 மணி அளவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அதில், மருத்துவ காரணங்களை ஏற்க முடியாது என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதாலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *