சென்னை, அக். 19–
ரெயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடமிருந்து நேற்று ஒரே நாளில் ரூ. 22 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செல்பவர்களை டிக்கெட் பரிசோதகர்கள் அவ்வப்போது பிடித்து அபராதம் விதித்தாலும் ஓசி பயணம் செய்வதில் பலர் ஆர்வம் காட்டத்தான் செய்கிறார்கள். நேற்று முன்தினம் ஒரே நாளில் தென்னக ரெயில்வே 31 டிக்கெட் பரிசோதனை குழுவினர் மூலம் தீவிர சோதனை நடத்தியது. இந்த சோதனை சென்னை சென்ட்ரல், பெரம்பூர், ஈரோடு, கோவை, எர்ணாகுளம் ஆகிய ரெயில் நிலையங்களில் நடத்தப்பட்டது. இதில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 300 பேர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.22.7 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி வரை ரூ.57.48 கோடி அபராத தொகை வசூலாகி உள்ளது.
முறையற்ற டிக்கெட்டுகள், லக்கேஜ் கட்டணம் செலுத்தாதது ஆகியவையும் அடங்கும். அபராத வசூலில் சென்னை கோட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு ரூ.21.82 கோடி வசூலாகி உள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தில் ரூ.8.72 கோடியும், பாலக்காடு கோட்டத்தில் ரூ.8.32 கோடியும் வசூலாகி உள்ளது.
இதுபற்றி ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் அனைவரும் வேண்டுமென்றே டிக்கெட் எடுக்காமல் வருபவர்கள் அல்ல. அவசர அவசரமாக ரெயிலை பிடிக்க ஓடி வருபவர்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிடிப்பதற்காக அவசர கதியில் வருபவர்களும் உண்டு என்று கூறினர்.