டெல்லி புறப்பட்டார்
கோவை, பிப்.19–
மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் நிலவுவதால் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பிறகு முதல் முறையாக 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் காலை தமிழகம் வந்தார். புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வந்த அவர், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் மாலையில் கோவைக்கு வந்தார். மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்திற்கு ஜனாதிபதி திரபுவதி முர்மு வந்தார். அங்கு அவரை ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். அங்குள்ள சூர்ய குண்டத்தில் தீபம் ஏற்றி வழிபட்டார். பிறகு தியான லிங்க சன்னதிக்கு சென்று தியானம் செய்தார். பின்னர் ஆதியோகி முன்பு கோலாகலமாக மகா சிவராத்திரி விழா தொடங்கியது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி மும்மு பங்கேற்று பேசினார். விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற பின்னர் இரவு 9.15 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து தங்கினார்.
இன்று காலை கோவை விமான நிலையத்துக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்று போர் நினைவுச்சின்னத்தில் ஜனாதிபதி திரவுபதி மும்மு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி மும்முவின் நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் நிலவுவதால் ஹெலிகாப்டரில் செல்ல முடியாத சூழல் இருப்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நண்பகல் 12 மணியளவில் கோவை விமான நிலையத்தில் இருந்து ஜனாதிபதி திரவுபதி மும்மு டெல்லி புறப்பட்டு சென்றார்.