சில்லாங், மார்ச் 23–
மேகாலயா அரசு நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தது என்ற அமித் ஷாவின் பேச்சு குறித்து, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் எம்பி சிபிஐ இயக்குநருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சிபிஐ இயக்குநருக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில், “பிப்ரவரி 17, 2023 அன்று அமித் ஷா தனது உரையில், அப்போதைய மேகாலயா அரசு நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசு என்று கூறியதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா கூறிய கூற்றுக்கு, அவரிடம் தகவல்கள் மற்றும் உண்மைகள் நிச்சயமாக கிடைத்திருக்கும்.
அமித் ஷாவை விசாரியுங்கள்
அப்போதைய மேகாலயா அரசாங்கத்தின் ஊழல் நடைமுறைகள் மற்றும் நிகழ்வுகள், இது தொடர்பான தகவல் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார். எனவே, தேசிய நலன் கருதி, அமித் ஷாவை அழைத்து, ஊழல் குறித்து அவர் பேசியதற்கு உண்டான தகவல்களையும் உண்மைகளையும் சமர்ப்பித்து, விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து, பேசியதற்காக ராகுல் காந்தியிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.