செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

Makkal Kural Official

புதுடெல்லி, அக்.17-

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டம் அதற்கு ஒப்புதல் அளித்தது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அவர்கள் தற்போது அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்தை அகவிலைப்படியாக பெற்று வருகிறார்கள். இனிமேல், அகவிலைப்படி 53 சதவீதமாக உயருகிறது.

கடந்த ஜூலை 1-ந் தேதி முதல், அகவிலைப்படி உயர்வை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ.9 ஆயிரத்து 448 கோடி செலவாகும்.

49 லட்சத்து 18 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், 64 லட்சத்து 89 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையிலும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

2025-–2026 குறுவை சந்தை பருவத்தில் 6 வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி, கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விலை, குவிண்டாலுக்கு ரூ.2,275-ல் இருந்து ரூ.2,425 ஆக உயர்ந்துள்ளது.

கடுகு விதைக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.300 உயர்த்தப்பட்டது. அதன் விலை, குவிண்டாலுக்கு ரூ.5,940 ஆக உயர்ந்துள்ளது. குங்குமப்பூவுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.140 உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விலை, குவிண்டாலுக்கு ரூ.5,800-ல் இருந்து ரூ.5,940 ஆக உயர்ந்துள்ளது.

மசூர் பருப்பின் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.275 உயர்த்தப்பட்டது. அதன் விலை, ரூ.6 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது. கடலைப்பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.210 உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விலை, குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்து 650 ஆக உயர்ந்துள்ளது.

பார்லிக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.130 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விலை, குவிண்டாலுக்கு ரூ.1,850-ல் இருந்து ரூ.1,980 ஆக உயர்ந்துள்ளது.

இத்தகவல்களை மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் தெரிவித்தார். இதன்மூலம், விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

மராட்டியம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில், வாரணாசி-பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சந்திப்பு வழித்தடத்தில் ரூ.2 ஆயிரத்து 642 கோடி செலவிலான ரெயில் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இதில், கங்கை ஆற்றின் மீது புதிய ரெயில் பாலமும், சாலை பாலமும் கட்டப்படும். 3-வது மற்றும் 4-வது ரெயில் பாதைகள் அமைக்கப்படும். இதன்மூலம், அந்த வழித்தடத்தில் சரக்கு போக்குவரத்து எளிதாக நடைபெறும் என்று மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *