பெங்களூரு, மார்ச் 21–
பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையில் வாகனங்களை வழிமறித்து கொள்ளையடித்து வந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையை கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்து வைத்தார். இருப்பினும், அதற்கு முன்பாகவே இந்த சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஒரு கும்பல் அந்த விரைவுச்சாலையில் செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்களை வழிமறித்து, அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து வந்தனர்.
கொள்ளையர்கள் 5 பேர் கைது
இதையறிந்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் பயணிகளை மிரட்டி கொள்ளையடித்து வந்த 5 பேரை கைது செய்துள்ளனர். அதன் பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தபட்டது.
அதில், அவர்கள் ஐந்து பேரும் ஏற்கனவே கொள்ளை வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததும், பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் விரைவுச்சாலையில் பயணிகளிடம் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.