கராச்சி, பிப்.14–
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியால் 1 லிட்டர் பால் 210 ரூபாய்க்கும், சிக்கன் 780 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்த கூடிய ரொட்டி, பால் பொருட்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன், கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. எரிசக்தி துறையில் ஏற்பட்ட பாதிப்பால், எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையாலும் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் கேட்டு உள்ளது.
இதற்காக சி.டி.எம்.பி. எனப்படும் கடன் மேலாண் திட்டம் ஒன்றை வகுத்து அதனை சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பியது. ஆனால், அதனை ஆய்வு செய்த அந்த அமைப்பு அத்திட்டத்தினை ஏற்காமல் நிராகரித்து விட்டது.
இதனால், பொருளாதார சிக்கலில் இருக்கும் அந்நாட்டின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்து அது மக்களுக்கு பெரும் சுமையை ஏற்றி உள்ளது. இதன்படி, சில்லரை விற்பனையில் ஒரு லிட்டர் பால் விலை ரூ.190-ல் இருந்து ரூ.210 ஆகவும், சிக்கன் இறைச்சி விலை ரூ.650-ல் இருந்து ரூ.780 வரை உயர்ந்து உள்ளது. பிராய்லர் கோழி விலை ரூ.480 முதல் ரூ.500 வரை உயர்ந்து உள்ளது.
இதேபோன்று இறைச்சி விலையும் கிலோ ஒன்றுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,100 வரை உயர்ந்து உள்ளது.