ஈரோடு, டிச. 3–
பட்டியலின மாணவ, மாணவியர்களை கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த வழக்கில், பள்ளி தலைமை ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில், 32 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியை கீதா ராணி, பள்ளியிலுள்ள கழிவறைகளை, பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவ, மாணவிகளை கொண்டு சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது.
தலைமை ஆசிரியை கைது
இது தொடர்பாக மாணவ, மாணவியின் பெற்றோர்கள் பெருந்துறை காவல்துறையினர் மற்றும் பெருந்துறை வட்டார கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து பவானி, சென்னிமலை, பெருந்துறை வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை செய்தனர்.
இதையடுத்து, தலைமை ஆசிரியை கீதா ராணி மீது வன்கொடுமை தடுப்பு பிரிவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமை ஆசிரியை தலைமறைவானார். இந்த நிலையில், தலைமறைவான கீதாராணி இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.