சென்னை, மார்ச் 2–
தென் தமிழக மாவட்டங்களில் 4 மற்றும் 5–ந்தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். 6–ந்தேதியும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
4 மற்றும் 5–ந்தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் வருமாறு:–
திருநெல்வேலி நாலுமுக்கு 3 செ.மீ., காக்காச்சி, ஊத்து, மணியாச்சி தலா 2 செ.மீ., வேதநத்தம், திருநெல்வேலி, மாஞ்சோலை, கொடுமுடியாறு அணை தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.