திருப்பூர், ஜன.5–
திருப்பூரில் காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையம் பகுதியில் பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் தீக்காயங்களுடன் நேற்று மாலை இளம்பெண் அலறியபடி பிரதான சாலைக்கு ஓடி வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இளம் பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தீ வைக்கப்பட்ட பெண் வடமாநிலத்தை சேர்ந்த பூஜா (வயது 19) என்பதும், பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் இப்ராகிம் என்பவர் வீட்டில் தங்கி அருகே உள்ள பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.
வேலைக்கு சென்ற இடத்தில் ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் லோகேஷ் (22) என்பவருடன் பூஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இந்தநிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி லோகேஷை பூஜா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
நேற்று மாலை பல்லடம் பனப்பாளையம் – பெத்தாம்பாளையம் சாலையில் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த லோகேஷ் கல்லால் பூஜாவை தாக்கியதுடன் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை, பூஜா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்த நிலையில் பூஜா அலறியபடி சாலைக்கு ஓடி வந்துள்ளார்.
இதனைக் கண்ட லோகேஷ் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றபோது தவறி விழுந்து காயமடைந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூஜா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் லோகேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.